கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது?
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கல் அன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 30-ம் தேதியே திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 86 ஏக்கா் நிலத்தில் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் 2,000 பேருந்துகள் வரை வந்து செல்லும் வகையிலும், 270 கார்கள், 3,500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பேருந்து நிலையப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காவல்நிலையம், பூங்கா அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே முதற்கட்டமாக வண்டலூர் பூங்காவில் இருந்து கடந்த நவ.12-ம் தேதி அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து வரும் பொங்கல் பண்டிக்கைக்குள் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த (டிசம்பர்) மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாவும், வருகிற 30-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.