சித்திரை திருவிழா - மதுரை வந்தடைந்தது வைகை நீர்!
மதுரை மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா கடந்த மே எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
வழக்கமாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து ஆண்டு தோறும் நீர் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் சித்திரைத்
திருவிழாவில் அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காகவும், கூட்டுக் குடிநீர் திட்ட கிணறுகளின் நீர் ஆதாரத்தை
பெருக்குவதற்காகவும், தமிழக அரசின் உத்தரவின்படி வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து 2 தினங்களுக்கு முன்பாக திறக்கப்பட்ட தண்ணீரானது இன்று மதுரை வந்தடைந்தது. வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கக் கூடிய பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் வந்தடைந்தது. மே 12 ஆம் தேதி காலை 6 மணி வரை வைகை அணையில் இருந்து மதுரைக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.