சிப்காட் பெட்ரோல் குண்டுவீச்சு - போலீசாரை தாக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது, இன்று நள்ளிரவு மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் பழைய குற்றவாளிகள் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே காவல் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஹரி என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். சென்னை அருகே பதுங்கி இருந்த பரத், விஷால், ஹரியை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை வரும் வழியில் வாணியசத்திரம் பகுதியில் சிறுநீர் கழிக்க சென்ற நிலையில் எஸ்ஐ முத்தீஸ்வரன், எஸ்எஸ்ஐ கண்ணன் ஆகியோரை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சசிகுமார் பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியால் ஹரியை சுட்டுள்ளார். முதல் ரவுண்டு மிஸ் பயர் ஆகியுள்ளது. இரண்டாவது ரவுண்டில் சுட்டதில் ஹரியின் இடது கால் முட்டியில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. காலில் காயம் அடைந்த ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.