பாக். வெளியுறவு அமைச்சருடன் சீன தூதர் சந்திப்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கிடையே, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இந்த சூழலை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் யாரேனும் உயிரிழந்துள்ளார்களா எந்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
இதனிடையே, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குததில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலை கருத்தில் கொண்டு காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக்கை சீன தூதர் ஜியாங் ஜைடோங் நேரில் சந்தித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போதைய சூழல் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.