அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை - அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம் !
அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களை தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்த இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்கவின் வரி விதிப்புக்கு பதிலடியாக கனடாவும் 25 சதவீதம் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தது. அதேபோல, மெக்சிகோவும் விரைவில் பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவின் வரிவிதிப்பு சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.
அமெரிக்கவின் இந்த செயல் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும். அமெரிக்கா தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உலக வர்த்தக கூட்டமைப்பில் [WTO] இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும் சீனா எச்சரித்துள்ளது.