மதிய உணவு திட்டம் - செலவின தொகைக்கு ரூ.4,114 கோடி உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவு!
மதிய உணவு திட்டத்திற்கான செலவின தொகைக்கு ரூ.4,114 உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்காக சமைக்கப்படும் உணவின் செலவீன தொகையை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ. 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ. 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவூட்டுச் செலவினம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.4114 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் இதன் மூலம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.