சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் #mkstalin ஆய்வு!
அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் கனமழையையொட்டி அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னையில் நேற்று இரவில் இருந்தே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதைத்தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
தொடர்ந்து, மழை பாதிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வடசென்னையின் சில பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, சென்ட்ரல் அருகே உள்ள யானைக்கவுனி மேம்பாலம் அருகே உள்ள கால்வாயில் மழைநீர் தடையின்றி சென்றிட, கழிவுகளை JCB எந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணியை ஆய்வு செய்தார். பின்னர், பேசின் மேம்பாலத்தில் இருந்து, காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழை நீர் தங்குதடையின்றி செல்கிறதா என நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு செய்தபோது, அங்கு மீட்பு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார். அப்போது, அவர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உங்களுடன் முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என கூறினார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், , கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் – நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் கனமழையையொட்டி அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.