For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு! காவிரி கரையோர பகுதிகளில் செய்துவரும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்!

10:01 PM Aug 02, 2024 IST | Web Editor
அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திடீர் ஆய்வு  காவிரி கரையோர பகுதிகளில் செய்துவரும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்
Advertisement

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரிகரையோர மாவட்ட ஆட்சியர்களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

Advertisement

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதனையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து 1.50 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  இதனால், காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசித்த மக்கள் தற்போது வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறைசெயலர் பெ.அமுதா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வின்போது, முதலமைச்சரிடம் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள், காவிரி கரையோரப் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் விளக்கினர். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், காவிரிக்கரையோரத்தில் உள்ள 7 மாவட்ட ஆட்சியர்களிடம் அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேட்டூர் அணையில் இருந்துஅதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புகருதி, 1.54 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைசேர்ந்த 470 வீரர்கள் நீலகிரி, கோவை, திண்டுக்கல், மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement