தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ - மக்கள் உற்சாக வரவேற்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவதோடு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அதன்படி 2 நாள் பயணமாக இன்றும் நாளையும் (15, 16-ந்தேதிகள்) தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகள் மூலம் காவிரி நீரை பகிர்ந்து அளிக்கும் வகையில் தண்ணீரை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்றார். அங்கு சுற்றுலா மாளிகையில் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் அவர் சுற்றுலா மாளிகையில் இருந்து 2 கி.மீ. தூரம் ரோடு ஷோவாக பழைய பஸ்நிலையம் வரை பொதுமக்களை சந்தித்தவாறு, மனுக்களை பெற்று கொண்டு சென்றார். அதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்தார்.