அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் - திருவள்ளூரில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழ்நாட்டின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக கடந்த 15.9.2022 அன்று 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கிவைக்கப்பட்டது.
இதன் மூலம் 1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 25.8.2023 ல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இதன் ஒருபகுதியாக கல்வி வளர்ச்சி நாள் என அழைக்கப்படும் காமராஜர் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்தத் திட்டத்தின் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட உள்ளன. இதன் மூலம் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடையவுள்ளனர்.