“காலம் உள்ளவரை கலைஞர்” கண்காட்சியை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“காலம் உள்ளவரை கலைஞர்” கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளை வென்றுள்ளது. இதனையடுத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் வெற்றி பெற்ற எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு “காலம் உள்ளவரை கலைஞர்” என்ற கண்காட்சியை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். இந்த நவீன கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், திமுக எம்.பி ஆ. ராசா மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும் கண்காட்சியை பார்வையிட்டனர்.