முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்!
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளில் கடந்த ஜூலை மாதத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அவற்றில் உடுமலை, பொள்ளாச்சி நிகழ்வுகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை செல்கிறார்.
சென்னையில் இருந்து 5.25 மணிக்கு விமானத்தில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருபவர், மாலை 6:50 மணிக்கு காரில் உடுமலை நரசிங்கபுரம் செல்கிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து உடுமலையில் இரவு தங்குகிறார்.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களை சிறப்பிக்கும் வகையில் திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி பயிற்சி மையம், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ க்கள் மகாலிங்கம், பழனிச்சாமி ஆகியோரது சிலைகளுடன் கூடிய நினைவு மண்டபம் பொள்ளாச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் 1.25 ஏக்கரில் 4 கோடியே 28 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதன் பின் கோவையில் இருந்து சென்னை திரும்புகிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் 500 போலீசார், மற்றும் மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நகருக்குள் வரும் வெளி மாநிலம் மற்றும் வெளியூர் வாகனங்களை சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.