9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட ஒன்பது தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்விருதுகளை வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 3.6.2021 அன்று, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2022-ம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட விருதாளர்கள்:
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் அரங்க.ராமலிங்கம் (மரபுத்தமிழ்),
- விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொ.மா.கோதண்டம் (ஆய்வுத்தமிழ்),
- கோயம்புத்தார் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தன் (61) மா.மருதாச்சலம் (படைப்புத்தமிழ்)
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக தெரிவு செய்யப்பட்ட இலக்கிய மாமணி விருதாளர்கள்:
- நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி அர்ஜூணன் (மரபுத்தமிழ்),
- திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர.திருவிடம் (ஆய்வுத்தமிழ்),
- சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த க.பூரணச்சந்திரன் (படைப்புத்தமிழ்)
2023-ம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட விருதாளர்கள்:
- கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா.மாணிக்கவாசகன் (மரபுத்தமிழ்),
- திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் (ஆய்வுத்தமிழ்),
- சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச.நடராசன் (படைப்புத்தமிழ்)
ஆகியோருக்கு முதலமைச்சரால் இலக்கிய மாமணி விருதிற்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்பட்டு, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.