நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரை நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் நடிகர் ராஜேஷ்.
150க்கும் மேலான படங்களில் நடித்து கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்த அவர் இன்று காலமானார். இவருக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்னைகள் இருந்து வந்த நிலையில், இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.
இவரின் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராஜேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், சென்னையில் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ராஜேஷின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.