“மருத்துவ புரட்சி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாவது இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு நிறைவு விழா மற்றும் புதிய கட்டப்பணிகள் தொடக்க விழா ,புதிய மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவின்போது அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதாவது, “ கரூரில் கூடுதலாக 50 படுக்கை கொண்ட புதிய கட்டிடம் இன்று தொடங்கப்பட்டது. கரூர் மாவட்டத்தை தன்னிறைவு மாவட்டமாக உருவாக்கி வைத்து உள்ளார் செந்தில்பாலாஜி. 143 மாணவர்களுக்கு பட்டமளிப்பு வழங்கபடுகிறது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் இன்றைக்கு 2 கோடியே 25 லட்சம் பயனாளிகள் பயன் பெற்று உள்ளனர்.
கரூரில் விரைவில் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்படும். மருத்துவர் கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெறுகிறது. பல் மருத்துவ பணியிடங்கள் 48 இடத்திற்கு 8 ஆயிரம் பேர் தேர்வு ஆகி உள்ளனர். விரைவில் சிறந்த பல் மருத்துவர்களுக்கான பணி ஆணை வழங்கப்படும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் விரைவில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டதை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். தனியார் மருத்துவமனையில் ரூ.15 ஆயிரம் வரை முழு உடல் பரிசோதனை செய்ய செலவாகிறது. இந்த திட்டம் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்படும். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1256 முகாம் நடைபெற உள்ளது. டிசம்பர் இறுதிக்குள நடத்தி முடிக்கப்பட்டு மருத்துவ துறையில் ஒரு மருத்துவ புரட்சி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்” என்றார்.