கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து இன்று தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகள் மூலம் காவிரி நீரை பகிர்ந்து அளிக்கும் வகையில் தண்ணீரை திறந்து வைத்து, நெல்மணிகளை தூவினார்.
இதன் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர் டெல்டா மாவட்டங்களில் 5.28 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. டெல்டா மாவட்டங்களில் சராசரியாக 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக 5 லட்சம் ஏக்கராக அதன் பரப்பளவு அதிகரித்துள்ளது. இந்தாண்டு 5.28 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக உரிய காலத்தில் தண்ணீர் திறப்பு, பருவ மழை, ஆழ்துளை கிணறு ஆகியவற்றின் மூலம் பரப்பளவு அதிகரித்து 1.95 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.