டெல்லியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - திமுகவினர் உற்சாக வரவேற்பு!
நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், அதன் தலைவராக உள்ள பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே.24) நடைபெறவுள்ளது. இதற்காக மத்திய அரசு பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் இந்தாண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்பு தகவல்கள் வெளியானது.
வெளியான தகவல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களுக்காக கடந்தாண்டு இந்த கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லாமல் குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் என்றும் வெள்ளைக்கொடிக்கு வேலை வந்துவிட்டது என்றும் விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் டெல்லி செல்வதை உறுதிபடுத்தும் வகையிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மே 21 ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
"பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?” என்று கூறினார். இதையடுத்து இன்று(மே.23) காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றடைந்தார். அங்குள்ள விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.