பத்திரிகையாளர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தி வயர் பத்திரிகையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த்துக்கு அசாம் போலீசார் சம்மன் அனுப்பியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தனியார் ஆங்கில பத்திரிகையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் ஆகியோருக்கு சம்மன் அனுப்பிய அசாம் காவல்துறையின் நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்பு இருவர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்த சில நாட்களில் சம்மன் அனுப்பியுள்ளனர். FIR நகல் எதுவும் இல்லாமல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இருவரும் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை முடக்க தேசத் துரோக சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால் ஒரு ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.