சென்னையில் மின்சாரப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், சென்னையில் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது.
அதன்படி உலக வங்கி உதவியுடன் மொத்த விலை ஒப்பந்தத்தின்படி (ஜி.சி.சி.) 1,225 மின்சார தாழ்தள பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை வியாசர்பாடி பணிமனையிலிருந்து மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் பணிகள் முடிவடைந்தன.
இந்நிலையில் சென்னை வியாசர்பாடியில் இருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதற்கட்டமாக தொடக்கி வைத்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்தில் ஏறி பேருந்தின் சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் இந்த பேருந்துகளில் பாதுகாப்பு கருதி 7 சி.சி.டி.வி. கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இருக்கையின் கீழும் சீட் பெல்டு, சார்ஜிங் பாயிண்டு, உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.