For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உயிர் பலி வாங்கும் சென்னையின் பிரதான சாலைகள்... வேதனை தெரிவிக்கும் மக்கள்!

சென்னையின் பல முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் விபத்தில் சிக்கி பல உயிரிழப்புகள் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
03:02 PM Jun 11, 2025 IST | Web Editor
சென்னையின் பல முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் விபத்தில் சிக்கி பல உயிரிழப்புகள் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
உயிர் பலி வாங்கும் சென்னையின் பிரதான சாலைகள்    வேதனை தெரிவிக்கும் மக்கள்
Advertisement

சென்னை புறநகர் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் வடிகால் பணிகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளுக்காக அவ்வப்போது பள்ளங்கள் தோண்டப்பட்டு, அந்த பள்ளங்கள் சரி செய்யப்படாமல், அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன. இவ்வாறு மூடப்படாமல், கிடப்பில் போடப்படும் பள்ளங்கள், பொதுமக்களின் உயிரை குடிக்கும் எமன்களாக மாறிவிடுகின்றன.

Advertisement

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பிரதான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. சாலை பராமரிப்புக்காக ஆண்டுதோறும் ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் தனிப்பட்ட நிதி ஒதுக்கியும் கூட, சென்னையில் உள்ள சாலைகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் காட்சியளிக்கின்றன.

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த செம்பருத்தி என்ற பெண் தனது குடும்பத்தின் வருமானத்திற்காக கடந்த ஓராண்டாக வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் சொந்த ஆட்டோ வாங்கி ஓட்டவும் முடிவு செய்துள்ளார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிருக்கான பிங்க் ஆட்டோ என்ற திட்டத்தை கொண்டு வந்தார். கடந்த மகளிர் தினத்தன்று 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை முன்பணம் இல்லாமல் இலவசமாக வழங்கினார்.

அப்போது செம்பருத்தியும் அதில் ஒரு ஆட்டோவை வாங்கி, சில மாதங்களாக அந்த
ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூன்.11) காலை செம்பருத்தி வடபழனியில் இருந்து ஆட்டோவில் பயணியோடு ஆழ்வார்பேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது கத்திட்ரல் சாலையின் நடுவே திடீரென தோண்டப்பட்டுள்ள பள்ளம் தெரியாமல், அங்கு சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி ஆட்டோ விபத்தில் சிக்கியது.

சுவற்றின் மீது மோதியதில் கண்ணாடி உள்பட ஆட்டோவின் பல பாகங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. மேலும் ஆட்டோவை ஓட்டி சென்ற பெண் ஓட்டுநர் செம்பருத்தியும், அதில் பயணம் செய்த பயணியும் பயங்கர காயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து, இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர்.

ஆனால் ஓட்டுநர் செம்பருத்தி மருத்துவமனைக்கு செல்ல மறுத்து, இதற்கு ஒரு முடிவு கிடைக்காமல் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தப் பள்ளம் குறித்து எந்த அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை; ஏன் திடீரென இந்த பள்ளம் தோண்டப்பட்டது?. விபத்து ஏற்படும் பகுதியாக இருந்தும், ஏன் இந்த இடத்தில் போக்குவரத்து காவலர்கள் இல்லை என பல்வேறு கேள்விகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விபத்து நடக்கும்போது எந்த காவலர்களும் இல்லாததால், அறிவிப்பு எதுவும் இல்லை என்றால் இதுபோன்று சாலையில் பள்ளங்கள் இருப்பது எப்படி பயணிகளுக்கு தெரியும் என, நெற்றியில் ரத்தம் சொட்டியபடியே, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என பேசினார்.

மேலும் சென்னையில் எங்கு பார்த்தாலும் சாலைகள் பள்ளம், மேடாகவே இருப்பதாக வேதனை தெரிவித்தார். இதே போன்ற பள்ளத்தால் கடந்த வாரம் தனது உறவினரும் விபத்தில் சிக்கி பெரிய காயம் அடைந்ததாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். பெரும்பாலான சாலைகளில் இது போன்ற பள்ளம் இருக்கும் இடங்களில் போக்குவரத்து காவலர்கள் உரிய எச்சரிக்கை தருவதில்லை என்றும், அவர்கள் வாகன ஓட்டிகள் இடம் பணம் பறிப்பதிலேயே ஆர்வம் செலுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் செம்பருத்தி வேதனை தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement