சென்னை மழைநீர் வடிகால் பணிகள் - அமைச்சர் கே.என். நேரு விளக்கம்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், வடபழனியில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்காவை நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு நேற்று(ஜுன்.03) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி (தியாகராயநகர்), த.வேலு (மயிலாப்பூர்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதன் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “அக்டோபர் மாத வட கிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கெனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடத்தி அடிப்படை வேலைகளை செய்ய உத்தரவிடப்பட்டு, அந்த வேலைகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மெட்ரோ பணிகள் நடைபெறும் இடத்தில் பிரச்னைகள் உள்ளது. அதையும் கண்காணித்து வருகிறார்கள். அதேபோல் ஆகாய தாமரை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இப்படி பல வேலைகள் நடக்கிறது வரப்போகிற மழை எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ள முதலமைச்சர் ஆலோசனைப்படி வேலைகள் நடந்து வருகிறது.
மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை அனைத்து பணிகளும் முடிந்தது. கொசஸ்தலை ஆறு பணிகள் மட்டும் நடைபெறுகிறது. அதை முடிக்க இன்னும் 6 மாத காலம் ஆகும். லோக்கலில் உள்ள சாலை பணிகள் முடிந்திருக்கிறது. தண்ணீர் தேங்கும் இடத்தை கான்கிரீட் சாலைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீர் தேங்காத அளவுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம். சென்னையில் இருக்கும் 35,000 சாலைகளில் 5000 சாலைகள் போடுவதற்கான டெண்டர் விடப்பட்டு சாலைகள் போடவுள்ளோம்” என்றார்.