கிரிண்டர் செயலியை தடை செய்யக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கடிதம்!
சென்னை மாநகரில் போதை பொருட்களை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக காவல் துறை தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினரின் இத்தகைய நடவடிக்கையால் கஞ்சா, மெத்தபெட்டமைன் ஹெராயின், ஆம்பெட்டமைன் உள்ளிட்ட பல்வேறு வகை போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்,
மேலும் இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களிடம் போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் பெரும்பாலான நபர்கள் கிரிண்டர் ஆப் செயலி மூலமாக பல்வேறு குழுக்களை உருவாக்கி அதன் மூலம் சென்னையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிரிண்டர் செயலி மூலம் பத்தில் ஐந்து நபர்கள் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் தொடர்ச்சியாக இந்த கிரிண்டர் செயலி மூலம் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதால் இந்த செயலியை தமிழ்நாட்டில் தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதில் இந்த கிரைண்டர் செயலி மூலம் அதிக அளவில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாகவும் அதை தமிழ்நாட்டில் தடை செய்தால் போதை பொருள் விற்பனையை தடுக்க வழி வகுக்கும் என மாநகர காவல் ஆணையர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.