சென்னை : கட்டப் பையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை - தாயே தூக்கி எறிந்த கொடூரம்!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை இஞ்சாம்பாக்கம் செல்வா நகர் பிரதான சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் (34). தனியார் கார் கம்பெனியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அருண் மனைவி பாரதி. இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
பாரதி தனது 2 பெண் குழந்தைகளை வீட்டின் அறையில் உறங்க வைத்துள்ளார். அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தை காணவில்லை என கத்தி கூச்சலிட்டுள்ளார். பாரதி கத்தி கூச்சலிடும் சத்தம் கேட்டதும் மேலே தூணி காய வைத்திருந்த மாமியார் மற்றும் அண்ணன் மனைவி இருவரும் வந்து என்ன என்று கேட்டுள்ளனர்.
அப்போது பாரதி குழந்தையை கட்டிலில் உறங்க வைத்து விட்டு சமயலறைக்கு சென்றதாகவும் வந்து பார்த்த போது ஒரு குழந்தையை காணவில்லை என்றும் கூறியுள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார் குழந்தையின் தாய் மற்றும் வீட்டில் இருந்த உறவினர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து குழந்தையின் தாய் பாரதியிடம் விசாரணையை போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணயில் தன் குழந்தை பிறந்ததில் இருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாலும், இதனால் பாரதி அதிகளவில் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாலும் வீட்டில் யாரும் இல்லாத
நேரம் பார்த்து வீட்டில் இருந்த பிறந்து 43 நாட்களே ஆன குழந்தையை
கட்டப்பையில் போட்டு வீட்டின் அருகே உள்ள காலி மைதானத்தில் தூக்கி எறிந்து
விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இறந்த நிலையில் குழந்தையை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தாய் பாரதி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.