பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை... 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி!
நடப்பு ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை பவர்பிளே ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 50 ரன்களோடு பவர்பிளேவை தாண்டிய சென்னை மிடில் ஆர்டரில் 80 ரன்களை குவித்தது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்க 19.5 ஓவர்களிலேயே 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக டெவால்ட் பிரெவிஸ் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 30 ரன்களும் அடித்தனர்.
ஹைதராபாத் அணி தரப்பில் ஹர்சல் படேல் 4 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனத்கட் தலா 2 விக்கெட்டுகளும், சமி, மெந்தீஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 155 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்தது.
கடைசிவரை போராடி தோல்வியை தழுவியது சென்னை அணி. சென்னையின் அணியின் நேற்றைய தோல்விக்கு முக்கிய காரணம் பத்திரனா ஓவரில் வைட், எக்ட்ராஸ் என சென்றதே ஆகும். கிட்டத்தட்ட 15 ரன்கள் எக்ஸ்ட்ராஸில் வந்தது. இந்த குறிப்பிட்ட ரன்கள் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது.
ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 32 ரன்களும் அடித்தனர். சென்னை தரப்பில் நூர் அஹமத் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, கலீல் அஹமது, கம்போஜ் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். மேலும் இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி ப்ளே ஆஃப் செல்லும் தகுதியை இழந்தது. அதுமட்டுமில்லாமல் சொந்த மைதானத்தில் இந்த சீசனில் 4வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது சென்னை அணி.