சென்னை மின்சார ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு! 55 ரயில்கள் ரத்து! முழு விவரம் இதோ!
தாம்பரம் ரயில் தண்டவாளங்களில் நடைபெறும் 2 ஆம் கட்ட பராமரிப்பு பணி காரணமாக வரும் 23-ஆம் தேதியில் (23.07.2024) இருந்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை 23 நாட்களுக்கு 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த செலவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை பயணிக்க மின்சார ரயில் தான் பொதுமக்களின் முதல் தேர்வாக இருக்கிறது. இதில் மற்றொரு குறிப்பிடத்தகுந்த விசயம், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தப்ப மின்சாரயில் நடுத்தரவர்க்க மக்களுக்கு முக்கிய ஆதரமாக திகழ்கிறது.
இந்நிலையில், தாம்பரம் ரயில் தண்டவாளங்களில் நடைபெறும் 2-ஆம் கட்ட பராமரிப்பு பணி காரணமாக வரும் 23-ஆம் தேதியில் (23.07.2024) இருந்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி சென்னை புறநகர் ரயில் சேவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.50 வரை 10 நிமிட இடைவேளையில் இயக்கப்பட்ட அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இதே போன்று இரவு 7.19 மணியில் இருந்து நள்ளிரவு 11.59 மணி வரையில் 10 நிமிட இடைவேளையில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதே போன்று மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு 10 நிமிட இடைவேளையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரையில் ரத்து செய்யப்படுகின்றன.இதில் திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயிலும் மொத்தமாக 23 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இரவு நேரத்தை பொறுத்தவரை கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 08.55 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட்ட 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு ரயில்கள்:
இப்படி 55 ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும், மக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக காலை 9.30 மணியில் இருந்து மதியம் 12.50 மணி வரை சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரை மட்டும் 20 நிமிட இடைவேளையில் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இரவு 10.40 மணியில் இருந்து நள்ளிரவு 11.59 வரை 25 நிமிட இடைவேளையில் மின்சார சிறப்பு ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை இயக்கப்படுகின்றன.
இதே போன்று மறுமார்க்கத்தில் பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.20 மணியில் இருந்து 20 நிமிட இடைவேளையில் மதியம் 01.40 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இரவு நேரத்தை பொறுத்தவரை, பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 11.30 மணியில் இருந்து சென்னை கடற்கரைக்கு 25 நிமிட இடைவேளையில் நள்ளிரவு 12.45 மணி வரை 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரிக்கும் இதே போன்று பகல் மற்றும் இரவு நேரங்களில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் அதிகாலை முதல் காலை 9.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அலுவலகம் சென்று திரும்புவோரை மனதில் கொண்டு இந்த நேரத்தில் மட்டும் மின்சார ரயில் சேவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.