For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Chennai | ரூ.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா - சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

05:33 PM Oct 07, 2024 IST | Web Editor
 chennai   ரூ 46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா   சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா
Advertisement

சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் குறித்து காணலாம்.

Advertisement

சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த பூங்கா அமைந்துள்ள இடம், ஒரு சங்கத்திடம் இருந்து அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டது. சென்னை மாநகர மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அந்த நிலத்தில் உலகத்தரம் வாய்ந்த பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அடிக்கல் நாட்டினார். ரூ.45.99 கோடியில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார்.

சிறப்பு அம்சங்கள்:

உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளம் உடைய ‘ஜிப்லைன்’ (கயிற்றில் தொங்கி செல்லும் சாகசம்), பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவு பாதை, 120 அடி நீளம் உடைய பனிமூட்ட பாதை, 2,600 சதுரஅடி பரப்பிலான ஆர்க்கிட் குடில், 10,000 சதுரஅடி பரப்பில் அரியவகை பூச்செடிகளால் அமைக்கப்பட்டுள்ள 16 மீட்டர் உயர கண்ணாடி மாளிகை, வெளிநாட்டு பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்கள் இப்பூங்காவில் உள்ளன.

கட்டண விவரம்: 

பூங்கா நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜிப்லைன் சாகச பயணம் செல்ல பெரியவர்களுக்கு ரூ.250, சிறியவர்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150. பறவையகத்தை பார்வையிட, உணவு அளிக்க பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75. மாலை நேரத்தில் இசை நீரூற்று நடனம் காண ரூ.50, கண்ணாடி மாளிகையை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.40. குழந்தைகள் பங்கு பெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50, புகைப்பட கருவிகளுக்கு ரூ.100, வீடியோ கேமராக்களுக்கு ரூ.5,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம் 3 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்.

https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளம் மூலம் நுழைவு கட்டண விவரங்கள் மற்றும் நுழைவு சீட்டை பெறலாம். க்யூஆர் குறியீடு மூலமாகவும் நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement