மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த கிராமத்தினர் - பேனர் வைத்ததால் பரபரப்பு!
சாத்தமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்காததால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் பேனர் வைத்து தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில் 15
ஆண்டுகளுக்கு மேலாக சரியான சாலை வசதி இல்லாமல் சாலைகள் குண்டும் குழியுமாக
காணப்படுகிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களை இயக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை வசதி அமைத்து தர பலமுறை அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து கிராம சாலை ஓரங்களின் முன்பு தேர்தல் புறக்கணிப்பு பேனரை வைத்து நூதன முறையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து 150 மீட்டர் அளவில் சாலைகள் சீர்செய்வதற்கான பணி உத்தரவு ஆணையைப் பெற்றனர். இதையடுத்து விரைவில் சாலை அமைத்து தரப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தராததால்
தேர்தலை புறக்கணிப்போம் என்று ஆரணிக்கு உட்பட்ட வந்தவாசி பகுதியில் பொதுமக்கள் பேனர் வைத்ததால் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.