சார்மினார் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து: 10 பயணிகள் காயம்!
ஐதராபாத் அருகே சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் பயணிகள் காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரயிலானது சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் வரை சென்று வருகிறது. வழக்கம் போல் நேற்று இரவு இந்த ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றது. இந்நிலையில் இன்று அதிகாலை ஹைதராபாத் ரயில் நிலையம் அருகே சென்ற போது இந்த ரயிலின் இரண்டு பட்டியல் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டன.
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளான S2 மற்றும் S3 பெட்டிகள் தடம் புரண்டதால் எஞ்சின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் நன்கு தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ரயில் தடம்புரண்டது அவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சில பயணிகள் தங்களது பெர்த்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் சில பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
ரயில் விபத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. மேலும் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்பதற்காக ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து உயர் அதிகாரிகள் மற்றும் மீட்பு பணி குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.