யுகாதி பண்டிகையை முன்னிட்டு தரிசன முறையில் மாற்றம் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
தெலுங்கு வருட பிறப்பானா யுகாதி பண்டிகை மார்ச் 30ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 25ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், அஷ்டதல பாத பத்மாராதனை சேவை அன்று நடைபெறாது எனவும், மார்ச் 30ஆம் தேதி யுகாதி அஸ்தான விழாவை முன்னிட்டு சஹஸ்ர தீப அலங்கார சேவையை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மார்ச் 25 மற்றும் 30ம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் விஐபி புரோட்டோகால் அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கப்படும். மார்ச் 24 மற்றும் 29 ஆகிய நாட்களில் விஐபி தரிசனத்திற்காக எந்த பரிந்துரை கடிதமும் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றைக் கருத்திற் கொண்டு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.