தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.