’இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு’- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
மத்திய வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
தொடர்ந்து இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.