தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், ஏனைய தமிழ்நாடு பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியது. புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அதிகபட்ச அளவாக குன்னூர் PTO (நீலகிரி) 12 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது.
இதையும் படியுங்கள் :“12 நிமிடங்களிலேயே சீலிங் ஃபேன் டெலிவரி” – வைரலாகும் பிளிங்கிட் செயலியின் பதிவு!
மேலும், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, அடுத்து ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் பின்னர் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.