"கோடையில் கனமழைக்கு வாய்ப்பு" - குட் நியூஸ் சொன்ன வெதர்மேன் பிரதீப்ஜான்!
லா-நினோ வருகையால் தமிழ்நாட்டில் கோடை காலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. மேலும் வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகமான நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுமாரும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து 100டிகிரியை கடந்துள்ளது. அதிகபட்சமான கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை வெயிலின் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களில் கடந்தை ஆண்டைவிட இந்த ஆண்டு கொள்ளவு சிறிய அளவில் குறைந்துள்ளது.
இந்த நிலையில், லா-நினோ வருகையால் தமிழ்நாட்டில் கோடை காலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நெப்போலியனிடம் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
"கடுமையான வறட்சி, தண்ணீர் பற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட தெற்கு தீபகற்ப மாநிலங்களில் கனமழை பெய்ய உள்ளது. எல் - நினோ வருகையால் நடப்பாண்டு வெப்பச்சலன மழை பரவலாக நல்ல மழையை கொடுக்கும்.
எல் - நினோ வருகையால் தென் மேற்கு பருவக்காற்று தீவிரம் பெற்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்யும். தற்போதைய வானிலை முன் கணிப்புகளின் அடிப்படையில் நடப்பாண்டு கனமழை உறுதி." இவ்வாறு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.