சாம்பியன்ஸ் டிராபி தொடர் - பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து!
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. நியூசி தரப்பில் அதிகபட்சமாக டாம் லாதம் 118 ரன்களும், வில் யங் 107 ரன்களும் குவித்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டும், அப்ரார் அகமது 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், பாகிஸ்தான் 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர், வில்லியம் ரூர்கி தலா 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.