சாம்பியன்ஸ் டிராஃபி - 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி!
2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.
11 லீக் போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் 8 அணிகளிலிருந்து ‘இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா’ அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நடுவில் ஸ்ரேயாஸ் மற்றும் அக்சர் பட்டேல் இணை 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்து வந்தனர். அக்சர் பட்டேல் 42 ரன்கள் அடித்து வெளியேற, ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடும் முயற்சியில் 79 ரன்கள் இருந்தபோது கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்துவந்த கேஎல் ராகுலும் 23 ரன்னில் நடையை கட்ட 182 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தடுமாறியது. இறுதிவரை களத்தில் நிலைத்துநின்று போராடிய ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 249 ரன்களை சேர்த்தது இந்திய அணி. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 6 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 81 ரன்களை குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 45.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூசிலாந்து. இதன்மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற்றது.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து நாளை மறுநாள் துபாயில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா.