ஃபெஞ்சல் புயல் பாதிப்பை பார்வையிட தமிழ்நாடு வருகிறது மத்திய குழு!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழ்நாடு விரைகிறது.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால், தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் விளைவாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மேலும் கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
மழை பாதித்த பகுதிகளில் பல்வேறு கட்சியினரும் நிவாரணப் பொருள்களை அளித்து வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.2000 கோடி வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழ்நாடு விரைகிறது. மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய உள்ளது.
சென்னை வரும் மத்திய குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்திக்கின்றனர். பின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி பகுதிகளை பார்வையிடுகின்றனர்.