தமிழர்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் !
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"வழக்கறிஞர்கள் (திருத்த) சட்ட வரைவு 2025 மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை 'மெட்ராஸ் பார் கவுன்சில்' என மாற்றத் துடிக்கின்றது மத்திய பாஜக அரசு. பல்வேறு சட்டவரைவு திருத்தங்கள் செய்து, மாநில அங்கீகாரத்தை முற்றிலும் நீக்கி, அதிகாரத்தை தன்னிடமே குவிக்க முயற்சிக்கிறது பா.ஜ.க. அரசு. எங்கெல்லாம் தமிழ்நாடு என்றிருக்கிறதோ அதையெல்லாம் மாற்ற நினைக்கிறது மத்திய அரசு.
சட்டவரைவு திருத்தங்கள் செய்வதன் மூலம் தமிழ், தமிழர்கள் என்றால் மத்திய பாஜக அரசுக்கு உள்ள வெறுப்பையே காட்டுகிறது. தமிழ் மொழியையும், தமிழர்களையும் ஒடுக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மிக வன்மையாக கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.