மோதலை நிறுத்த வர்த்தக ரீதியாக அணுகியதாக கூறிய ட்ரம்ப் - இந்தியா முழுமையாக மறுப்பு!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவானது. இது அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று(மே13) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், இரு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் நிலைமையை புரிந்து கொண்டு போர் நிறுத்தம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் போர் நிறுத்தத்தை உறுதி செய்தால் தான் இரு நாடுகளுடன் வர்த்தக ரீதியாக அணுகுவோம் என்று தெரிவித்ததால்தான் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டதாக ட்ரம்ப் பெருமையாக பேசினார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் கூறி வந்த வர்த்தக ரீதியான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “ஜம்மு-காஷ்மீர் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு ரீதியாக தீர்க்க வேண்டும் என்பது எங்கள் நீண்டகால நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. நிலுவையில் இருப்பது பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதியை விடுவிப்பது மட்டும்தான்.
ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய நாளில் இருந்து ராணுவ நிலைமை குறித்து இந்திய மற்றும் அமெரிக்க தலைவர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் வர்த்தகம் தொடர்பான விவாதங்கள் எழவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.