For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நீட் தேர்வு முறைகேடுகள் புகார் குறித்து சிபிஐ விசாரணை” - இந்திய மருத்துவர் சங்க இளநிலை மருத்துவர் பிரிவு வலியுறுத்தல்!

01:36 PM Jun 08, 2024 IST | Web Editor
“நீட் தேர்வு முறைகேடுகள் புகார் குறித்து சிபிஐ விசாரணை”   இந்திய மருத்துவர் சங்க இளநிலை மருத்துவர் பிரிவு வலியுறுத்தல்
Advertisement

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்திய மருத்துவர் சங்க இளநிலை மருத்துவர் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

நீட் மறுதேர்வு நடத்த வலியுறுத்தி சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார், கருணை மதிப்பெண் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு, இதுவரை இல்லாத அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவைகளை சுட்டிக்காட்டி மறுதேர்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.

தங்களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரம் என்பதால் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமை ஆகியவையும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தேர்வு முடிவுக்கு முன்பே ஒஎம்.ஆர் ஷீட் மற்றும் வினாக்களுக்கான விடைகளையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட போது ஒஎம்.ஆர் ஷீட்டுடன் ஒப்பிடுகையில், மாறுபட்ட மதிப்பெண்கள் போடப்பட்டு இருப்பதாக பல மாணவர்கள் புகார்களை முன்வைத்துள்ளனர்.

அர்ஷிதா தெவ் என்ற 18 வயது மாணவி கூறுகையில், 384 மதிப்பெண்கள் நான் ஸ்கோர் செய்தேன் ஆனால், தேர்வு முடிவுகளில் 308 மதிப்பெண்களே வந்துள்ளது. 80 மதிப்பெண்கள் வித்தியாசம் உள்ளது" என்றார். எனவே பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தெரிவதால் மறு தேர்வு வைக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில், நீட் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை,நேர்மையான முறையிலேயே நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வில் நடந்ததாக கூறப்படும், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்திய மருத்துவர் சங்கத்தின் இளநிலை மருத்துவர் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதோடு, நியாயமான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு முறையை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
Advertisement