தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 38வது கூட்டம் இன்று நடைபெற்றது. காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொளி முறையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம், நீர்த் திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 7.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 2.5 டிஎம்சி தண்ணீர் கர்நாடகா திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.