“சாதிய உணர்வை சாதி மற்றும் மதவாத அமைப்புகள் திட்டமிட்டு பரப்புகிறது” - திருமாவளவன் பேட்டி!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவன் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது வழிமுறைத்த மூன்று பேர் கொண்ட கும்பல் சரமரியாக வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த போலீசார் விசாரணையில் பாதிக்கபட்ட மாணவன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சேர்ந்தவர் என்றும்கபடி போட்டியில் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவனை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது “ சாதி வெறி தீய சக்திகளால் கொடூரமாக தாக்கப்பட்டு இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தேவேந்திரர் ராஜ். இடது கையில் சுண்டு விரலை இணைத்து தைக்க முடியவில்லை. இன்னும் சுய நினைவு திரும்பவில்லை. ரத்த இழப்பு அதிகமாக இருக்கிறது. ஹீமோகுளோபின் ஐந்து என்ற அளவில் இருக்கிறது. மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவரை காப்பாற்ற முயற்சி செய்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. படிப்பிலும் விளையாட்டில் தீவிரமான ஆர்வம் உள்ளவர்.
கபடி குழுவில் இணைந்து வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறார். அந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத கும்பல் அவரை ஒரு மாதமாக பின்தொடர்ந்து தேர்வு எழுத வந்த நிலையில் அவரை கொடூரமாக வெட்டி இருக்கிறார்கள். கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் பின் இருந்து சிலர் இயக்கியிருக்கிறார்கள். வெட்டுவதற்கு இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். வெட்டி முடித்த பின்பு காரில் ஏறி சென்று இருக்கிறார்கள்
வெட்டுவதற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தது யார்? வெட்டி காயப்படுத்திய பின்பு காரில் அழைத்துச் சென்றவர்கள் யார்? என்பதை புலனாய்வுத்துறை விசாரணை செய்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு இழப்பு வழங்க வேண்டும். மாணவரின் கல்வி பாதிக்கப்படாதவாறு அரசு முடிவு எடுக்க வேண்டும்.
இந்த கிராமத்தில் 20 குடும்பங்கள் தான் பட்டியல் சமூகத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள். தேவேந்திர ராஜா குடும்பத்திற்கு அங்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் எந்த நேரத்திலும் தாக்கப்படலாம். எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்துகிறோம். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடைபெறும் இது போன்ற வன்முறையை தடுக்க முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை ஈடுபடுவதற்கு சிறப்பு புலனாய்வு குழு ஏற்படுத்த வேண்டும் தனி புலனாய்வு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுகிறோம்.
இந்த விவகாரத்தில் காவல்துறை விரைவாக பரப்பிய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. காதல் விவகாரத்தில் தான் இது போன்ற நிகழ்வு நடக்கிறது என்ற செய்தியை பரப்பி இருக்கிறார்கள். யாரை காப்பாற்ற இது போன்ற செயல்களை காவல்துறை செய்கிறது என்று தெரியவில்லை. விளையாட்டின் காரணமாகத்தான் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. எனவே இப்படிப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு புலனாய்வு செய்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்காது.
இந்த வழக்கை விசாரிக்க கூடிய காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். வதந்தியை பரப்பி அவர்கள் விசாரணை மேற்கொண்டால் அவர் அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்காது. தென் மாவட்டங்களில் தொடர்ந்து இதுபோன்ற சாதி வன்முறைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று தேவேந்திரராஜா உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதிகார வர்க்கத்தை சார்ந்தவர்கள் ஏன் பட்டியலின சமூக விரோத மனநிலையில் செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை.
முதலமைச்சரின் நேரடி பார்வையில் இது இருக்க வேண்டும் முதலமைச்சரின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற வேண்டும் இந்த குடும்பத்திற்கு சட்டபூர்வமான நீதி கிடைக்க வேண்டும். மாணவர்களிடையே இது போன்ற சாதிய உணர்வை சாதியவாத அமைப்புகளும் மதவாத அமைப்புகளும் திட்டமிட்டு பரப்பி வருகிறது. சாதியின் பெயரால் நடக்கக்கூடிய அநீதி தலைமுறை தலைமுறையாக நடக்கிறது. சாதிய வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் தலைமையில் வெளியிட்டுள்ள அறிக்கையை அலசியப்படுத்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்”
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.