செவிலியர் நிமிஷா பிரியா தொடர்பான வழக்கு - மத்திய அட்டர்னி ஜெனரல் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் விவகாரம் தொடர்பாக மதபோதகர் கே. ஏ. பால் என்பவர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரிக்கபட்டது. அப்போது கே.ஏ.பால் தரப்பு,
”நிமிஷா பிரியாவுக்கு எப்போது வேண்டுமானாலும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை அவரின் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நிமிஷா பிரியா தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது, பல தவறாக செய்திகள் வெளி வருகின்ற எனவே அதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்"என கோரினார்
வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆஜராக நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கை 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அன்றைய தினம் இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நிமிஷா பிரியா விவகாரம்
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்தௌ வந்தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜினாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த தலால் அய்டோ மெஹ்தி என்பவருடன் இணைந்து அங்கு புதிய மருத்துவமனையை தொடங்கினார்.
கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்தியை நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்தி கொன்றதாக அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, 2025-ம் ஆண்டு ஜூலை 16-ம் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏபி அபூபக்கர் ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பலனாக நிமிஷா பிரியாவிற்கு வழங்கப்பட இருந்த மரண தண்டனை தள்ளிப்போடப்பட்ட தாக கூறப்பட்டது.