நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்சாண்டர் சார்லஸ் தொடந்த வழக்கில் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அவதூறான வகையில் அரசின் திட்டங்கள், மசோதாக்களை அமல்படுத்தும் விவகாரம் தொடர்பாக சீமான் பேட்டி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகாரளித்த போது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து வழக்கறிஞர் அலெக்சாண்டர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீமான் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை திருமங்கலம் போலீசார் சீமான் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.