அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதியின்றி நுழைந்ததாக, திருவல்லிக்கேணி காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமாரின் அறையைச் சோதனையிடுவதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் விடுதிக்குள் நுழைய எந்தவித அனுமதியையும் பெறவில்லை.
இதனால், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகச் செயலாளர் சீனிவாசன், மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, ஐ.பி.செந்தில்குமாரின் அறையைச் சோதனையிட அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக ஐந்து துணை ராணுவப் படையினர் துப்பாக்கியுடன் உடன் உள்ளனர்.
மேலும், சோதனையைத் தொடங்குவதற்கு முன்பாகவே, ஆதாரங்களுக்காக காணொளி காட்சிகளையும் அதிகாரிகள் பதிவு செய்து வைத்துள்ளனர். அதேசமயம், சட்டமன்ற உறுப்பினர் செயலாளர் சீனிவாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.