மதுரையில் அதிக விசை கொண்ட பம்புகள் விற்பனை- 2 கடைகள் மீது வழக்குப் பதிவு!
புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மே.6-ம் தேதியும், மீனாட்சி திருக்கல்யாணம் மே.8-ம் தேதியும், மே 9இல் தேரோட்டமும் நடைபெற இருக்கிறது.
தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே.12ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கள்ளழகர் மீது பக்தர்கள் நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக்கடனுக்கு கோயில் நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதன்படி, கள்ளழகர் மீது அதிக விசை கொண்ட பம்புகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி அடிக்கக்கூடாது. அதற்கு மாறாக தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி நீரை பீய்ச்சி அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரசாயனங்கள், திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டும் பீய்ச்சுமாறும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிக விசை கொண்ட பம்புகள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் அதிக விசை கொண்ட பம்புகளை விற்பனை செய்த 2 கடைகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், அதிக விசை கொண்ட 22 பம்புகளை பறிமுதல் செய்த மதுரை மாநகர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
- Edited by Pomitha