கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்கள் நிறைவு - மே 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!
கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வருகிற மே 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் தனது கைது நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும் கைதை எதிர்த்தும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவித்ததாவது..
நடந்து முடிந்த கோவா சட்டப்பேரவை தேர்தல் என்பது பொதுவான ஒன்றாகும். அங்கு கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றார். ஆனால் அதனையும் டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தையும் அமலாக்கத்துறை தரப்பில் தொடர்புப்படுத்தி உள்ளது. கோவா தேர்தலின் போது ஹவாலா பணத்தை கெஜ்ரிவால் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை தவறான அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
டெல்லி மதுபான கொள்கை விவகாரம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை ஆகியவற்றில் 99சதவீதம் உண்மை தன்மை மற்றும் ஆதாரங்கள் கிடையாது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள புஜ்ஜி பாவுக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இவர் கவிதாவின் சி.ஏ.வாக பணியாற்றி வந்தவர்
இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதம் நிறைவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.