மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த 14 பேர் உயிரிழப்பு; 21 பேர் படுகாயம்!
மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 21 பேர் படுகாயமடைந்ததனர்.
மத்திய பிரதேசத்தின் தேவேரி கிராமத்தைச் சேர்ந்த சிலர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு சரக்கு வாகனத்தில் ஏறி தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த வாகனம், திண்டோரி மாவட்டம் பட்ஜார் கிராமத்துக்கு அருகே வரும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த, போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்கைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், வெளியிட்ட இரங்கல் பதிவில், "விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறேன்"என்று தெரிவித்துள்ளார்.