For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள்” - கவிஞர் வைரமுத்து காட்டம்!

10:27 AM Oct 19, 2024 IST | Web Editor
“தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள்”   கவிஞர் வைரமுத்து காட்டம்
Advertisement

‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்ற உயிர் வாக்கியத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து தவிர்த்ததைக் காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள் என கவிஞர் வைரமுத்து காட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

துர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி சார்பில், சென்னையில் நேற்று ஹிந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழா நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி கலந்து கொண்டார். அப்போது அங்கு பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், ”தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரி மட்டும் பாடாமல் புறக்கணிக்கப்பட்டது. திராடவிடம் என்னும் சொல் மீது பாஜக தரப்பினருக்கு எப்போதும் வெறுப்புதான் என்ற கருத்து முன்னரே உள்ளநிலையில், இச்செயல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயலுக்கு பல தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது கடும் கண்டனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

https://twitter.com/Vairamuthu/status/1847274124747378697

“தமிழையும், தமிழ் நாட்டையும், திராவிடக் கருத்தியலையும் எதிர்க்கும் அல்லது இழிவுசெய்யும் பல நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் போயிருக்கிறோம். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற உயிர் வாக்கியத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து தவிர்த்ததைக் காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள்.

இருதயக் கூடு எரிகிறது. எவ்வளவுதான் பொறுமை காப்பது? இந்தச் செயலுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தமிழர்கள் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள். "திராவிட" என்ற  சொல்லை நீக்கிவிட்டு தேசிய கீதத்தைப் பாடமுடியுமா? தமிழ்த்தாய் வாழ்த்தில் தவிர்ப்பதற்கு மட்டும் யார் தைரியம் கொடுத்தது? திராவிடம் என்பது நாடல்ல; இந்தியாவின் ஆதி நாகரிகத்தின் குறியீடு.

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இதுபோன்ற இழிவுகள் தொடர்ந்தால் மானமுள்ள தமிழர்கள் தெருவில் இறங்குவார்கள்; தீமைக்குத் தீயிடுவார்கள். மறக்க வேண்டாம்; தாய்மொழி காக்கத் தங்கள் உடலுக்கும், உயிருக்குமே தீவைத்துக் கொண்டவர்கள் தமிழர்கள். அந்த நெருப்பின் மிச்சம் இன்னும் இருக்கிறது எங்களிடம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement