“பிரதமர் மோடியை மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள்” - அமைச்சர் உதயநிதி பரப்புரை!
ஜிஎஸ்டி ரூ.1 என்றால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 29 பைசா மட்டுமே கொடுக்கிறது. எனவே, மோடியை சந்திக்கும் போது மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள் என அமைச்சர் உதயநிதி தஞ்சையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இன்று (ஏப். 5) பட்டுக்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
“நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசு என்பது கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைத்தது மட்டுமே. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வரும் முன்பு கேஸ் சிலிண்டர் விலை ரூ.450 ஆக இருந்தது. தற்போது ரூ.1200 என்பதை மறந்து விட கூடாது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்திய அரசுதான் மோடி அரசு.
ஜிஎஸ்டி தொகை ஒரு ரூபாய் என்றால் நமது மாநிலத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் தொகை 29 பைசா மட்டுமே. ஆனால் பாஜக ஆளும் அதே உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் மூன்று ரூபாய் திரும்ப கொடுக்கிறது. நிதீஷ் குமார் ஆட்சி செய்யும் பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் 7 ரூபாய் அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறது. அதனால் தான் அடுத்த முறை மோடியை நீங்கள் சந்திக்கும் போது மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள் என்று கூறுகிறேன்.
இவ்வாறு தெரிவித்தார்.