தொழிலதிபரின் 11 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் - ஒருவர் கைது!
கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஸ்ரீதர் வீட்டில் கார் ஓட்டுநராக கரூரைச் சேர்ந்த நவீன் என்பவர் பணிக்கு சேர்ந்து உள்ளார். தினமும் 10 வயது சிறுவனை காரில் டியூசனுக்கு அழைத்துச் சென்று மீண்டும், வீட்டிற்கு அழைத்து வருவதை இவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு இடம் வாங்க ஸ்ரீதர் இடம் 12 லட்சம் ரூபாய் கார் ஓட்டுநர் நவீன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதர் மகனை அழைத்து வருவதாக கூறிவிட்டு டியூசன் சென்டருக்கு சென்று உள்ளார் கார் ஓட்டுநர் நவீன். ஆனால் அதன் பிறகு மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. நீண்ட நேரமாக மகன் மற்றும் ஓட்டுநர் நவீன் வராததால் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி கீர்த்திகா அதிர்ச்சி அடைந்தனர்.
ஓட்டுநர் நவீனை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு
இருந்தது. இந்நிலையில் டிரைவர் நவீன் சரவணம்பட்டியில் ஸ்ரீதர் கொடுத்து வைத்து இருந்த ஏ.டி.எம் கார்டு மூலம் பணத்தை எடுத்து இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு நவீன் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு அவர் கொடுத்த 12 லட்சம் பணத்தை திரும்பி தரும்படி கேட்டு உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் ஸ்ரீதர் இதுகுறித்து துடியலூர் காவல்
நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்
துறையினர் தனிப்படை அமைத்து குழந்தையை கடத்திய கார் ஓட்டுநர்
நவீனை தேடிவந்தனர்.
குழந்தையை கடத்திய கார் ஓட்டுநர் நவீன் மீண்டும் அழைத்து ரூபாய் 25 லட்சம் பணம் வேண்டும் எனக் கேட்டு மிரட்டல் விடுத்து உள்ளார். அவரின் தொலைபேசி
சிக்னலை வைத்து ஓட்டுநர் நவீன் ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றின் நடுவே இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், பவானி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பவானி காவல் துறையினர் சிறுவனுடன் பவானி ஆற்றில் மறைந்து இருந்த நவீனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைது செய்த நவீனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஸ்ரீதர் ரியல் எஸ்டேட்டில் 12 லட்சம் பணம்
முதலீடு செய்தால், மாதம் வட்டி வழங்கப்படும் என்றும் கூறிய தகவலை அடுத்து நவீன் பணம் முதலீடு செய்து இருந்தார். ஸ்ரீதரிடம், நவீன் தான் கொடுத்த பணத்தை திரும்பி தரும்படி கேட்டு வந்து உள்ளார். ஆனால் ஸ்ரீதர் பணத்தை திரும்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது மகனை டியூசனுக்கு சென்று அழைத்து வருவது போல் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
சிறுவனை மீட்ட காவல் துறையினர் பெற்றோரிடம் அவனை ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் துடியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.